பாரா ஒலிம்பிக் போட்டி ஈட்டி எறிதல் எப்-64 பிரிவில் இந்திய வீரர் சுமித் தனது முந்தைய சாதனையை தகர்த்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு நேற்று கிடைத்த 2வது தங்கப் பதக்கமாக அமைந்தது. பரபரப்பான பைனலில் இந்திய வீரர்கள் சுமித் அன்டில், சந்தீப் பங்கேற்றனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே களமிறங்கிய சுமித் அசத்தலாக 68.55 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து புதிய உலக சாதனையை படைத்ததுடன் 2019ம் ஆண்டு துபாயில் நடந்த சர்வதேச போட்டியில் 62.88 மீட்டர் தொலைவுக்கு எறிந்து தான் படைத்த சாதனையையும் முறியடித்தார்.
இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் மிக்கேல் புரியன் (66.29 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும், இலங்கை வீரர் துலான் கொடிதுவாக்கு (65.61 மீட்டர்) வெண்கலமும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் சந்தீப்(62.20மீட்டர்) இந்த முறையும் 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார். இவர் ரியோ பாரா ஒலிம்பிக்கிலும் 4வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.